Tuesday, February 28, 2006

ஈழத்தமிழன் காதல்கொண்டால்..


உன் கடைக்கண் பட்டால்
என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே
அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால்
"ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே
நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட
"A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே
"கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய்
என்னைக் கடந்தபின்தான் அறிந்துகொண்டேன்
நீயும் எனக்கு எமன்தானென்று..

நீ என்னை வெறுக்கிறபோதெல்லாம்
"கறுப்பு யூலை" தான் ஞாபகம்
நான் தரும் காதல் கடிதங்களை கண்டு
"ஊரடங்குச்சட்டம்" போல மொளனித்திருப்பதேனடி
நீ என்ன இந்திய காடையர் படையா?
இல்லை ஸ்ரீலங்காவின் காமவெறிப் படையா?
ஈழத்தமிழரைப்போல் என்னைப் பாடாய்படுத்துவதற்கு..

கண்ணிவெடியில் அகப்பட்டவன் போல
உன்னை கண்ட பின் நானும் ஓர் ஊனம் தானடி
ஓர் பார்வையில் நீயும் உலகவல்லரசுகளும்ஒன்றுதானடி
அமேரிக்கன் போல் வெருட்டிப்பார்க்கிறாய்
சிங்களவன் போல் அடக்கியாளப்பார்க்கிறாய்
ஆனால் நானும் ஈழத்தமிழன் போல்
சளைக்காது நிற்கிறேனே ஏன், எதற்கு
கொஞ்சமேனும் யோசிச்சுப்பாரடி யென்மூதேவி

மூதேவி என திட்டியதற்கு கூட கோபமா?
என் செல்லமே, என்னைப் பிடிச்ச சனியனே
நான் என்ன செய்ய........
நீ போகும்போது தானே அழகாயிருக்கிறாய்.

சொற்பதங்கள்

ஆட்லறி,A.K.47 - போரில் பயன்படுத்தப்படும்ஆயுதங்கள்,

ஜெஜசுக்குறு - இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்பட்ட
படைநடவடிக்கை.

கிபிர் - ஒரு வகை போர் விமானம்

கறுப்பு யூலை - இலங்கையில் தமிழர்கள்மீது சிங்களவர்களால்
மேற்கொள்ளப்பட் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை.

தேப்பன் - இலங்கையின் வட்டார வழக்குச்சொல்

தந்தை என பொருள் படும்.

Friday, February 10, 2006

"டும் டும் டும்" ஒப்பாரி

ஐயோ ஐயோ ஐயைய்யோ......
அநியாயத்துக்கு இப்பிடி பண்ணிட்டீயே
நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்த
பட்டாம் பூச்சி போல சுத்தித் திரிஞ்சியே
"பாவிப்பயலே" விட்டில் பூச்சி போலயாயிட்டியே
உனக்கு என்ன கேடு வந்ததுச்சின்னு
இப்பிடிப் பண்ணிட்டீயே "கேனப்பயலே"
உன் அழகுக்கு என்ன கேடு,அறிவுக்குத்தான் யாரீடு
ஊர் உலகம் ஆயிரம் சொல்லும்
"நாறப்பயலே" மதிமழுங்கி மரமாயிட்டீயே
ஐயோ ஐயோ ஐயைய்யோ............
கல்யாணம் கட்டிக்கிட்டீயே "களவானிப்பயலே"
கல்யாணம் கட்டிக்கிட்டியே
ஐயோ ஐயோ ஐயைய்யோ.......

Wednesday, February 08, 2006

இயற்கையுடன் சில கணம்

அன்று !
பாலர் பருவத்தில் பேருந்து பயணம்
எனக்கு கையசைத்து பின்னே மறைந்தவை
பச்சை மரங்கள் பசுமையுடன்...
இன்று !
முதுமையிலும் பேருந்துப் பயணம்
என்னை வளியனிப்பி பின்னே சென்றவை
சிவப்பு மாடிகள் எரிச்சலுடன்...